Wednesday, July 25, 2012

இஸ்லாத்தில் கவிதை - நாகூர் ரூமி

மனிதனையும் படைத்து
அவனுக்கு திருக்குர்னையும் அருளி
அதில் “கவிஞர்கள்” ( சூரத்துஸ் ஷ¤அரா) என்று
ஒரு அத்தியாயத்தையும் (26) இறக்கி வைத்து
கவிஞர்களை கண்ணியப் படுத்திய
பிரபஞ்ச மகா கவியாகிய
இறைவனுக்கே புகழனைத்தும்.


இன்றைக்கு நம்மிடையே கவிஞர்களுக்கு ஒன்றும் குறைவில்லை. ஒரு கம்பன், காளிதாசன், மெளலானா ரூமி, உமர் கய்யாம், ஹகீம் சனாய், அல்லாமா இக்பால், காலிப், தாகூர் என்று சொல்ல முடியாவிட்டாலும் நம்மில் பலர் இன்று புதுக்கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கின்றனர்.

அதில் பலர் நாடறியப் பட்டவர்களாக, ஏன் உலக அளவில் அறியப்பட்டவர்களாகக்கூட இருக்கின்றனர். அறியப்பட வேண்டிய பலர் அறியப்படாமல் கிடப்பதும் வேறு சிலர் தேவைக்கு அதிகமான புகழையும் விமர்சனத்தையும்கூட சம்பாதித்துக் கொண்டவர்களாக இருப்பதையும் நாம் அறிவோம்.

ஆனால் கவிதை என்றாலே இஸ்லாத்துக்கு ஒவ்வாத ஒன்று என்று ஒரு கருத்து இருப்பதை பலருடன் பேசியதிலிருந்து நான் அறிந்து கொண்டேன்.

கவிதைகள் என்று சொல்லப்படுபவைகளை அவ்வப்போது எழுதுகின்ற பழக்கம் கொண்டவனாக நானும் இருப்பதால் எனக்கு அது ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது. உண்மையிலே இஸ்லாம் கவிதைகளை தரிக்கவில்லையா? தரிக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் எதிர்க்காமலாவது இருக்கிறதா என்ற கேள்விகள் என் மனத்தில் எழுந்தன.

திருக்குர்-ஆனும் ஹதீதும் கவிதைகளை எதிர்ப்பதாக சொல்லப்பட்ட தகவல்கள் என்னை பயமுறுத்தின. எனவே நான் அது பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ளப் புறப்பட்டேன். என் பயணத்தில் நான் கண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

திருக்குர்ஆனும் ஹதீதுகளும் கவிதைகளை எதிர்க்கின்றனவா? முதலில் இந்தக் கேள்விக்கு பதிலை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

திருக்குர்னிலே கவிஞர்கள் என்ற 26வது அத்தியாயத்தின் வசனங்கள் 224 முதல் 226 வரை கவிஞர்களுக்கு எதிராகப் பேசுகின்றன :

224 : கவிஞர்கள் – அவர்களை வழி கெட்டவர்கள்தான் பின்பற்றுகிறார்கள்.


225 : நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் ( மனம்போன போக்கில்) திரிகிறார்கள் என்பதை நீர் பார்க்கவில்லையா?


226 : இன்னும் நிச்சயமாக அவர்கள் (சொல்வன்மையினால்) தாங்கள் செய்யாதவற்றை (செய்ததாக) கூறுகின்றனர்.


மேற்காணும் மூன்று வசனங்களும் கவிதைகளுக்கும் கவிஞர்களுக்கும் எதிரானதாகத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் ‘கவிதைக்குப் பொய் அழகு’ என்பதை எழுதாத விதியாகக் கொண்ட கவிதைகளுக்குத்தான் இது பொருந்தும்.

எனென்றால் இந்த வசனங்கள் மக்காவில் அருளப்பட்டபோது என்னைப்போலவே பயந்தும் குழம்பியும் போன மக்காவின் தலை சிறந்த முஸ்லிம் கவிஞர்களாக இருந்த அப்துல்லாஹ் இப்னு ரவாஹா, க’அப் இப்னு ஜுஹைர், ஹஸ்ஸான் இப்னு தாபித் கியோர் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று விளக்கம் கேட்டனர்.

பெருமானர், அவர்களைத் தேற்றி இவ்வசனங்கள் அவர்களைப் போன்ற உன்னதமான கவிஞர்களுக்குப் பொருந்தாது என்றும் பொய்யை அழகாகப் புனைந்து கூறுபவர்களையும் இஸ்லாத்தின் எதிரிகளாக இருந்தவர்களையும்தான் இவ்வசனங்கள் சாடுகின்றன என்றும் நல்ல கவிஞர்களுக்கு விதிவிலக்கு உள்ளது என்றும் சொல்லி அடுத்த வசனத்தையும் ஆதாரம் காட்டி ஆறுதல் சொல்கின்றனர் :

227 : ஆனால் ஈமான் கொண்டு நற்காரியங்களைச் செய்து, அல்லாஹ்வை அதிகமாக நினைந்து, தாங்கள் அநியாயம் செய்யப்பட்ட பின் பழிவாங்கினார்களே அத்தகையோர்களைத் தவிர ( மற்றவர்கள் குற்றவாளிகள் ).

எனவே இந்த விளக்கத்தின் அடிப்படையில்தான் நாம் பெருமூச்சு விட்டுக்கொண்டே கவிதைக்கு எதிரான ஹதீதுகளையும் அணுகவேண்டும். அதோடு, பெருமானர் ஒரு தீர்க்க தரிசியே அன்றி ஒரு கவிஞரல்ல என்ற வசனத்தையும் (சூரா ஹக் 69:41) ஒரு கவிஞன் என்பவன் தீர்க்கதரிசியைப் போல இறையருள் பாலிக்கப்பட்டவன் என்று நினைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

நிற்க, கவிதைக்கு தரவாக இஸ்லாமிய வரலாற்றில் ஏதாவது உள்ளதா என்று பார்க்கப் புகுந்தால் அங்கே வியப்பூட்டும் தாரங்களும் நிகழ்வுகளும் கொட்டிக்கிடக்கின்றன !

யார் மகா கவி?

ஒரு முறை நான் என் பள்ளிக்கூட தமிழாசிரியரிடம் மகாகவி என்றால் யார்? ஏன் கம்பன் பாரதியார் இவர்களை மட்டும் மகாகவி என்று சொல்கிறோம் என்று கேட்டேன். அதற்கு அவர் ஒரு அருமையான விளக்கம் கொடுத்தார்.

மகாகவி என்று சொல்லப்பட்டவர்கள் யோசித்து கவிதை எழுதிக்- கொண்டிருக்கவில்லை. வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர்களிடமிருந்து கவிதை கொட்டியது. அருவிபோல பெருக்கெடுத்து ஓடியது.

ஒரு குழந்தை கீழே விழுந்துவிட்டால் நாமாக இருந்தால் ஓடிப்போய் தூக்குவோம். ஆனால் பாரதி அதுமட்டும் செய்ய மாட்டான். ” ஓடி விளையாடு பாப்பா” என்று உடனே பாட்டும் பாடிவிடுவான்.

வீட்டுக்கு சமைக்க கஷ்டப்பட்டு வாங்கி வரும் அரிசியை காக்கைக்கும் குருவிகளுக்கும் போட்டுவிட்டு உடனே “காக்கைக் குருவி எங்கள் ஜாதி” என்று பாடுவான்.

அதனால்தான் அவன் மகாகவி என்றார். அந்த விளக்கம் எனக்கு சரியானதாகவே பட்டது.

உண்மைதான். ஒரு கவிதை எழுத நான் பட்ட கஷ்டம் எனக்குத்தானே தெரியும்?!

இஸ்லாமிய வரலாற்றின் மகாகவிகள் இஸ்லாத்தில் கவிதையின் இடத்தைப் பார்க்கப் புகுவோமானால் அதன் வரலாற்றில் நமக்கு பல ஆச்சர்யங்கள் காத்துக் கிடக்கின்றன. அவற்றில் ஒன்று அங்கே மகா கவிகள் மலிந்து கிடந்தார்கள் என்பது !

ஆம், என் ஆசிரியர் மாகாகவிக்கு சொன்ன வரையறையை வைத்துப் பார்த்தால் அப்படித்தான் சொல்ல முடிகிறது !

ஒரு சின்ன உதாரணம் குஸா குலத்தைச் சேர்ந்த இப்னு சலீம் என்பவர் பெருமானாரிடம் வருகிறார். தமது குலத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளையெல்லாம் சொல்லிக்காட்டி பெருமானாரின் பாதுகாப்பைத் தேடுவதே அவரது நோக்கம்.

பெருமானாரை அவர்களது பள்ளிவாசலில் சந்திக்கும் அவர் மனதை உருக்கும் விதமாக தங்களது நிலையை விளக்கி ஒரு கவிதை பாடுகிறார் !

எனக்கு இந்த நிகழ்ச்சி மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது. துயர உணர்ச்சிகளின் உச்சத்தில் ஒரு மனிதன் இருக்கும்போது அவனால் அழவோ புலம்பவோ மெளனமாக இருக்கவோதான் முடியும் என்று நான் அறிவேன்.

ஆனால் வரலாற்றில் இங்கே, கல்வியறிவு இல்லாத ஒரு மனிதன் அந்த மாதிரியான கட்டத்தில் கவிதை பாடியுள்ளான் ! கவிதை புனையக்கூட இல்லை ! அப்படியென்றால் என் தமிழாசிரியரின் வரையறைப்படி அரேபியர் அனைவருமே மகாகவிகளாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதுதானே உண்மை !

அரேபிய நாட்டில் நிகழ்ந்துகொண்டிருந்த அன்றாட அற்புதங்களில் இதுவும் ஒன்று ! ஒரு வகையில் அரேபிய நாட்டின் வரலாறு கவிதையின் வரலாறாகவே உள்ளது.

வீரர்களை விட கவிஞர்களுக்கே மக்கள் அதிக மதிப்பு கொடுத்தனர். அரேபியர்களின் கலாச்சாரத்தில் இருந்து கவிதை பிரிக்க முடியாத ஒரு அடிப்படையான கூறாக உள்ளது. கவிதை அந்த காட்டரபிகளின் கூடப் பிறந்தது. அதன் காரணம் அரபி மொழியின் கவிதைத் தன்மையா அல்லது வேறு காரணங்களும் உள்ளனவா என்பது இப்போது நமது ஆராய்ச்சிக்கு உரிய விஷயமல்ல.

பொய்யான கவிதைகளைச் சாடும்போதுகூட இறைவன், “அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும்..” என்று ஒரு அழகான கவிதையை அல்லவா சொல்கிறான் !

கவிதையை அரேபியர்கள் “அனுமதிக்கப்பட்ட மாந்திரீகம்” (ஸிஹ்ர் ஹலால்) என்றே வர்ணித்தனர். தன்னை வெளிப்படுத்திக்கொள்ள ஒரு தலை சிறந்த ஊடகமாக கவிதையை அரபிகள் கண்டனர்.

கவிஞன் என்பவன் ஜின் அல்லது ஷைத்தானால் தூண்டப்பட்டே எழுதுகிறான் என்று அவர்கள் நம்பினர். ஒரு முழுமையான மனிதனுக்குரிய அடையாளமாக மூன்று விஷயங்கள் இஸ்லாத்தின் வரலாற்று ரீதியான வருகைக்கு முந்திய அறியாமைக் காலத்தில் அறியப்பட்டன.

அவை: கவிதை, அம்பெய்தல், குதிரை ஏற்றம் ஆகியவையே என்று அரேபியர்களின் வரலாறு என்ற நூலில் (The History of the Arabs) அதன் ஆசிரியர் ·பிலிப் கே ஹிட்டி கூறுகிறார்.

அரேபிய இலக்கியமே கஸீதா என்று பொதுவாக அறியப்பட்ட, அழைக்கப்பட்ட கவிதையிலிருந்து ஊற்றெடுத்துப் பிறந்ததுதான். அரபிகளின் கலாச்சார சொத்தாக இருந்தது கவிதை. கவிஞர்கள் தங்கள் புகழையும் கீர்த்தியையும் நிர்மாணித்துக் கொள்வதற்கும் பரப்புவதற்கும் ஆண்டு தோறும் துல்காயிதா மாதத்தில் கூடும் உக்காஸ் என்று சொல்லப்பட்ட சந்தையைப் பயன் படுத்திக்கொண்டனர்.

அப்போது நடைபெறும் கவிப்- போட்டிகளில் ஒவ்வொரு குலத்தின் கவிஞரும் தமது வீரம் ஈகை, மற்றும் மூதாதையர்கள் பற்றி பெருமையாகவும் விபரமாகவும் கூறுவர்.

போர்க்களத்தில்கூட வீரர்களின் வாட்களின் கூர்மைக்கு எந்த விதத்திலும் குறைந்ததாக கவிஞர்களின் நாக்கு இருக்கவில்லை. அந்தக்கால அரபிகள் மனிதர்களின் அறிவை அவர்களின் கவிதையை வைத்தே அளந்தனர். தனது சமுதாயத்தின் வரலாற்று சிரியனாகவும் விஞ்ஞானியாகவும் அவர்கள் கவிஞனையே கண்டனர். அரேபியா “கவிஞர்களின் தேச” மாகவே இருந்தது.

ஆறு வகையான கவிஞர்கள்

வரலாற்று அறிஞர்கள் அரேபிய கவிஞர்களை ஆறு பிரிவுகளில் வகைப்படுத்துகின்றனர்.

1. அல் ஜாஹிலிய்யூன்.

இஸ்லாத்திற்கு முந்திய அறியாமைக் காலத்து கவிஞர்கள். ஜுபைர், தரா·பா, இம்ரவுல் கய்ஸ், அம்ரிப்னு குல்சும், அல் ஹாரிது, அந்தாரா போன்ற மூத்த கவிஞர்கள்.

2. அல்முஹ்ஜரமூன்.

அறியாமைக் காலத்தில் பிறந்து பின்பு இஸ்லாத்தைத் தழுவிய கவிஞர்கள். லபீத், போன்றவர்கள். இவர்களைப் பற்றி பல ஹதீதுகளிலும் கூறப்பட்டுள்ளது.

3. அல்முதகத்திமூன்.

இஸ்லாத்துக்கு வந்தபெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள். ஜரீர், ·ப்ரஸ்தக் போன்றவர்கள்.

4. அல்முவல்லதூன்.

முஸ்லிம்களாகப் பிறந்தவர்களுக்குப் பிறந்தவர்கள். பஷார் போன்றவர்கள்.

5. அல் முஹ்திசூன்.

மூன்றாவது தலைமுறையின் முஸ்லிம் கவிஞர்கள். அபூ தம்மாம், புஹ்தரி போன்றவர்கள்.

6. அல் முத’ஆஹிரூன்.

ஐந்துக்குப் பிறகு வரும் எல்லாக் கவிஞர்களும்.

மூன்று நான்கு ஐந்தாவது பிரிவில் உள்ளவர்களை முறையே சஹாபாக்கள், தாபியீன்கள் மற்றும் தப’அத் தாபியீன்கள் காலத்தோடு பொருத்திப் பார்க்க இயலும்.

முஅல்லகாத் என்பது என்ன?

அந்தக்கால அரேபியாவில் ஒரு வழக்கமிருந்தது. ஏழு தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை க’அபதுல்லாஹ்வின் சுவர்களில் தொங்கவிடுவார்கள். அதற்குத்தான் முஅல்லகாத் என்று பெயர். அதுவும் சாதாரணமாக அல்ல. தங்கத்தில் எழுதி ! இப்படி எழுதி தொங்கவிடப்பட்ட தங்கக் கவிதைகளுக்கு முஸக்கபாத் என்ற பெயரும் வழங்கப்பட்டது.

ஏழு பேருடைய கவிதைகள் இந்த அந்தஸ்தைப் பெற்றன.

மேற்குறிப்பிடப்பட்ட ஆறு பிரிவில் முதல் இரண்டு பிரிவில் உள்ள கவிஞர்கள்தான் அவர்கள். அதில் லபீத் மட்டும் இஸ்லாத்தில் இணைகின்ற பாக்கியம் பெற்றார்.

அவருடைய இறைவனைத் தவிர மற்ற அனைத்தும் அழியக்கூடிய அசத்தியமே என்ற பொருள்படும் அலா குல்ல ஷையின் மா ஹலல்லாஹ¤ பாதில என்ற கஸீதா க’அபதுல்லாஹ்வில் தொங்கவிடப்பட்டது மட்டுமல்ல அது பின்னால் பெருமானாரிடம் “உண்மையைச் சொன்ன கவிஞர்களிலேயே லபீத் மிகச்சிறந்தவர்” என்ற புகழுரையையும் சம்பாதித்துக் கொண்டது.

கவிதையின் வலிமை இஸ்லாம் மெல்ல பரவிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அதன் எதிரிகள் வன்முறையிலும் வாள், அம்புகளைக் கொண்டு மட்டும் எதிர்க்கவில்லை. கவிதைகளைக் கொண்டும் கடுமையாக எதிர்த்தார்கள்.

மதினாவில் அவ்ஸ் கோத்திரத்தாரில் பெருமானாரை எதிர்ப்பவர்களில் ஒருவரான மர்வான் என்பவருக்கு அஸ்மா என்ற ஒரு மகள் இருந்தாள். அவள் கவிதைகள் புனைவதில் கெட்டிக்காரி. அன்சாரிகள் அறிவு கெட்டு அந்நியர் ஒருவரின் பேச்சில் மயங்கி தங்கள் மக்களை பத்ரு போரில் காவு கொடுத்து விட்டார்கள் என்ற பொருள்படும் கவிதை பாடினாள்.

அந்த கவிதையை மக்கள் பலரும் பாடக்கேட்ட ஒரு முஸ்லிம் ஆத்திரமடைந்து அஸ்மாவைக் கொலையே செய்துவிட்டார் !

ஆரம்ப காலத்தில் இப்படிப்பட்ட கவிதைகளையும் கவிஞர்களையும் பெருமானார் வெறுத்ததற்கு இதுவே முக்கியமான காரணம்.

” கவிதையால் நிரம்பிய வயிறைவிட கெட்டுப்போன உணவால் நிரம்பிய வயிறே பரவாயில்லை.” என்று பெருமானார் சொன்னதையெல்லாம் எதிர்ப்பான காலகட்டத்தின் ஒளியில் வைத்தே நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

க’அப் இப்னு ஜுஹைர் என்ற கவிஞரைக் கண்டவுடன் கொல்லும்படி பெருமானார் உத்தரவிட்டிருந்தார்கள் என்றால் கவிதை எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்த வல்லதாக இருந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இது போதுமானது.

பின்னாளில் இதே ஜுஹைர்தான் பானத் சுத் என்ற புகழ் பெற்ற புகழ்ப்பாடலான முதல் புர்தாஷரீ·பை பெருமானார்மீது பாடி அவர்களின் போர்வையையும் பரிசாகப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதினாவின் க’அப் இப்னு அஷ்ர·ப் என்ற புகழ் பெற்ற கவிஞன் மக்கா சென்று பாடிய முஸ்லிம் விரோத கவிதைகளுக்கு எதிராக எதிர்ப்பாட்டு புனையுமாறு பெருமானார் ஹஸ்ஸானுக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.

ஒரு முறை மதினாவில் பெருமானாருக்கும் பனூ தமீம் கூட்டத்தாருக்கும் நாவன்மை, கவித்திறமை இவைகளில் போட்டி நடந்தது. பனூ தமீம் சார்பாக அல் ஜிப்ரிகான் இப்ன் பத்ரு என்பவர் தம் பாட்டுத்திறமையைக் காட்டினார். பெருமானார் சொன்னதன் பேரில், ஹஸ்ஸான் முஸ்லிம்கள் சார்பாக எதிர்ப்பாட்டுக்கள் பாடி பதிலளித்து வென்றார்.

ஹஸ்ஸான் கவிதை பாடுவதற்கென பெருமானரின் பள்ளிவாசலில் தனி மேடையே அமைக்கப்பட்டிருந்தது என்றால் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் !

அவருடைய கவிதைகளுக்கு ரூஹ¤ல் அமீன் ஜிப்ரீல் (அலை)அவர்களைக் கொண்டு உதவி புரியுமாறு பெருமானார் இறைவனிடம் துஆ செய்துள்ளார்கள் !

இந்த மாதிரியான காலகட்டங்களில்தான் ” கவிதை நல்லதெனில் நல்லது கெட்டதெனில் கெட்டது” என்றும் ” சில கவிதைகளில் ஞானம் உள்ளது” என்றெல்லாம் பெருமானார் சொல்லியுள்ளார்கள்.

போர்க்களங்களில் கவிதை

கவிதை போர்க்குணம் கொண்டதாக இருப்பதாலோ என்னவோ இஸ்லாமிய வரலாற்றில் பல போர்க்களங்களோடு அது தன்னை சம்பந்தப்படுத்திக் கொண்டிருக்கிறது. பொதுவாக போர்க்களங்களில் வீரர்களுக்கு உற்சாகமூட்டுவதற்காக வட்டப்பறையடித்து பாடல்கள் பாடும் பெண்களையும் உடன் அழைத்துச் செல்வது வழக்கமாயிருந்தது.

பத்ரு யுத்தத்திற்காக அபூஜஹ்ல் திரட்டிக் கொண்டு வந்த படையினருக்கு உற்சாகமூட்ட இத்தகைய பெண்கள் சிலரும் உடன் கிளம்பினர். உஹதுப் போரில் அபூசு·ப்யானின் மனைவி ஹிந்தாவின் தலைமையில் வந்திருந்த பெண்கள் தம்பூர் என்ற இசைக்கருவி இசைத்து, வட்டப்பறை முழக்கி டிப்பாடி வீரர்களுக்கு உற்சாகமூட்டினர்.

அகழ்ப்போரில் அகழ் தோண்டும்போது களைப்பு மறக்க முஸ்லிம்கள் இறைவனின் புகழ்பாடி அருள்வேண்டும் பண்களை இசைத்தவர்களாய் அனைவரும் பணியைத் தொடங்கினர். கைபர் சண்டையின் போது படையினருக்கு உற்சாகமூட்டும் போர்ப்பரணி ஒன்றை புனையுமாறு மிர் இப்னு அல்கமா என்பவரை பெருமானார் பணித்தார்கள்.

ஹ¤னைன் போரில் கிடைத்த பங்குப் பொருள்களில் திருப்தியுறாத அப்பாஸ் இப்னு மிர்தாஸ் என்ற கவிஞர் பெருமானார் மீது குறைப்பட்டு ஒரு கஸீதா பாடினார். அவர் நாக்கைத் துண்டிக்குமாறு பெருமானார் உத்தரவிட, அதன் உட்பொருளை உணர்ந்த அலியார் அவர்கள் அவருக்கு மேலும் 60 ஒட்டகங்களை கொடுத்து அவரை சமாதானப் படுத்தினார்கள். நூறு ஒட்டகங்கள் கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பத்ருப் போருக்குப் பிந்தைய மக்காவின் இரவுகள் யாவும் மர்ஸிய்யா (எனப் பட்ட இரங்கற்பா) க்களால் நிரம்பியிருந்தன என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.

பெருமானாரின் கவிதை ஒரு யுத்தத்தில் காயம் பட்ட தன் கால் விரலைப் பார்த்து பெருமானார்

ஹல் அன் தி இல்லா இஸ்ப’உன் தமீத்தி
வ ·பீ சபீலில்லாஹி மா லகீத்தி


ரத்தம் வரும் நீயோ ஒரு விரல்தான் ஆனால்
இது அல்லாஹ்வுக்காக நீ கொடுத்த குரல்தான்

(தோராயமான தமிழாக்கம் எனது )  என்று பாடினார்கள்.

இந்த வரிகள் சல்மா இப்னு அம்ரல் அன்சாரியின் கவிதை என்பதாக புகாரி ஷரீ·பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் Dictionary of Islam தொகுத்த தாமஸ் பாட்ரிக் ஹ்யூஸ் யாருடைய கவிதை என்று சொல்லாமலே விட்டுவிட்டார்.

படிப்பவர்களுக்கு அது பெருமானாரே புனைந்த கவிதை போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுக்கிறது. எனினும் கவிதை புனைவது பெருமானாரின் ஆளுமைக்கு ஏற்புடையதல்ல என்பதை திருக்குர்’ஆனிலிருந்தும் ஹதீதுகளிலிருந்தும் நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாத்தைப் பற்றி முஸ்லிம் அல்லாதவர்களால் எழுதப்பட்ட நூல்களில் எழுதியவர்களின் அறியாமை அல்லது உள்நோக்கம் இவற்றை நாம் உணர்ந்து கொள்ளாமல் படித்துவிடக்கூடாது என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறேன்.

ஏன், பெருமானார் ஒரு கவிஞராக இருந்தால் என்ன கேவலமா என்று கேட்கக்கூடாது. காரணம் ஒரு தீர்க்க தரிசியின் அந்தஸ்தும் இலக்கும் மிக உயர்ந்தது. அந்த இலக்கை அடைய கவிஞர்களின் திறமையையும் உண்மையையும் அவர்கள் பயன் படுத்திக்கொண்டார்களே தவிர அவர்களே கவிஞராக இருக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்படவில்லை.

இறை விருப்பப்படி. பெருமானார் குடும்பத்தாரின் கவிதைகள் பெருமானாருக்கு அன்பும் ஆதரவும் கொடுத்து வந்த அபூதாலிப் அவர்களிடம் குறைஷிகள் வந்து பெருமானாரைப் பற்றி முறையீடு செய்து எச்சரித்துவிட்டுச் சென்றபோது, அபூதாலிப் அவர்கள் ஹரம் ஷரீ·பின் சிறப்பு, வம்ச மேன்மை, பெருமானாரின் சத்தியம், சற்குணம் இவை பற்றி கவிதை பாடுகிறார்கள் !

கவிதையின் முடிவில் ” நாம் ஈமான் கொள்ளவில்லை எனினும் உயிர் மூச்சுள்ளவரை அவரை தரிப்போம்” என்று கவிதையை முடிக்கின்றார்கள்! ”

எங்கள் மனைவி மக்களை மறந்து, முஹம்மதுக்காக நாங்கள் எங்கள் உயிரைக் கொடுப்போம் “ என்பது அவர்களின் இன்னொரு கஸீதா !

அபூபக்கர் சித்தீக் அவர்கள் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருந்தபோது, கவிதை இயற்றுவதிலும் சிறந்து விளங்கிய அன்னை ஆயிஷா அவர்கள் ஒரு ஈரடிப்பாடலை தம் தந்தையாரைப் புகழ்ந்து பாடுகிறார்கள். அதைக் கேட்டு கண் திறந்த அபூபக்கர் அவர்கள் ” இவ்வளவு புகழ்ச்சி பெருமானாருக்கு மட்டுமே உரியது” என்று சொல்லிவிட்டுக் கண்களை மூடிக்கொள்கிறார்கள்.

இருள் சூழ்ந்த இரவிலும் ஒளி விளக்கைப் போல மின்னுகிறது அண்ணலாரின் நெற்றி என்ற பொருள்படும் கஸீதாவை பெருமானாரின் மறைவுக்குப் பிறகு பாடியுள்ளார்கள் அன்னை ஆயிஷா அவர்கள்.

இந்த ரீதியில் அன்னை ச·பிய்யாவும் கவிதைகள் புனைந்துள்ளனர். ச·பிய்யா என்ற பெயருடைய பெருமானாரின் அத்தை ஒருவரும் மர்ஸிய்யா பாடல்களை எழுதியுள்ளார்கள். “இந்த உலகமே இருளடைந்து விட்டது” என்று தொடங்கும் இரங்கற்பாவை உமர்(ரலி) அவர்களும் உதுமான்(ரலி) அவர்களும் பாடியுள்ளனர். ”

அழு என் கண்களே” என்று தொடங்கும் கவிதையை ஹம்ஸா, அபூபக்கர், அப்பாஸ் போன்றோர் பாடியுள்ளனர். ”

துன்பத்தின் அளவுக்கு கண்ணீர் வருமானால் மேகத்தின் மழையை அது மிஞ்சிவிடும்” என்பதாக அலி அவர்கள் கவிதை பாடினர்.

” மிம்பக்தி மெளதில் முஸ்த·பா” என்று தொடங்கும் ஈரடிப்பாடலையும் அலியார் இயற்றியுள்ளனர்.

அஹ்மதுவின் கல்லறையின் நறுமணம் நுகர்வோருக்கு வேறு மணம் தேவையில்லை இவ்வாழ்வில் என்றும் பகலெல்லாம் இரவாகிவிடும் ( முஹம்மதுவைப் பிரிந்த என் ) வேதனைகளை பகல்மீது பொழிந்தால் என்றும் அன்னை ·பாத்திமா அவர்கள் பெருமானார் மீது கவிதை பாடியுள்ளார்கள்.

இவையெல்லாம் பெருமானார் இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்ற பின் சொல்லப்பட்ட இரங்கற் பாக்கள்.

துன்பத்தின் உச்சியிலும் வேதனைகளின் விளிம்பில் கூட அவர்களுக்குக் கவிதை வந்திருக்கிறது. அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்கள் இஸ்லாத்திற்காக இன்னுயிரை விட்ட தியாகியாவார்கள். அவர்கள் உயிர் பிரிந்து கொண்டிருந்த சமயம் கடைசிவரை கவிதைகள் பாடிக்கொண்டே இருந்தார்கள்!

குபைப் இப்னு அதீ (ரலி) என்று ஒரு நபித்தோழர். இஸ்லாத்திற்காக எதிரிகளால் தூக்கில் போடப்பட்ட முதல் முஸ்லிம். தன் இறுதிசையாக தொழ அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அனுமதித்தவுடன் ஒளுச்செய்துவிட்டு சுருக்கமாக தொழுகையை முடித்துக்கொண்டார்கள். ஏன் என்று கேட்டதற்கு, ” நான் வெகு நேரம் தொழ விரும்பினாலும், மரணத்திற்கு பயந்து இறுதி நபியின் தோழர் வெகு நேரம் தொழுதார் என்று குற்றச்சாட்டு வரக்கூடாது அல்லவா” என்றார்களாம்.

இவர்களும் உயிர் பிரியும் தருவாயில் கவிதை பாடிக்கொண்டிருந்தார்கள் !


அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்கள் யஸீதுக்குப் பிறகு கலீ·பாவாக இருந்தவர்கள். அபூபக்கர் சித்தீக் அவர்களின் பேரர் ஜுபைரின் மகன். ஹஜ்ஜாஜோடு ஹரம் ஷரீ·பில் நடந்த சண்டையின் போது அவர்கள் தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தபோது கவிதை பாடினார்கள் !

மு’வியா(ரலி) அவர்கள் கலீ·பாவாக இருந்த காலத்தில் உடம்புக்கு முடியாமல் இருந்தபோது கண்ணுக்கு சுர்மாவும் எண்ணெயும் இட்டுக் கொண்டு ரோக்கியமாக இருப்பதைப் போன்ற தோற்றத்தில்தான் மக்களைச் சந்திப்பார்களாம்.

அப்போது அந்த சூழ்நிலை பற்றி கவிதை பாடுவார்களாம்! அதோடு அவர்களின் உடலைக் கழுவிக்கொள்ள உதவி செய்யும் தன் மகள்களைப் பற்றியும் கவிதை பாடுவார்களாம் !

ஹஸ்ரத் அலி(ரலி) அவர்கள் தாம் கொலை செய்யப்படுவோம் என்பதை முன்னரே அறிந்து வைத்திருந்தார்கள். பள்ளி வாசலுக்குச் செல்வதற்காக கஷ்டப்பட்டு எழுந்தபோது மரணம் பற்றியும் அதை துணிச்சலாக சந்திப்பதைப் பற்றியும் கஸீதா பாடினார்கள் !

இமாம் ஷா·பி’ஈ அவர்களை சித்ரவதை செய்தபோது, லுன் நபிய்யி தரிய்யத்தி, வ ஹ¤ம் இலய்ய வஸீலத்தீ எனது சேமிப்பெல்லாம் அருமை நபியின் வழித்தோன்றல்கள்தான் என்னும் பொருள்படும் கவிதையினைப் பாடினார்கள் !

இமாம் நஸீமி (ரஹ்) அவர்களை தலை கீழாகத் தொங்கவிடப்பட்டு அவர்கள் தோலை உரித்துக் கொன்றனர் பாவிகள். அப்போது ஏகத்துவ ஞானம் பற்றிய 500 பாடல்களைப் பாடி அவர்கள் உயிர் துறந்தார்கள் !

சூ·பி அபூபக்கர் ஷிப்லி அவர்கள் ” நீ வாழும் வீட்டில் ஒளியேற்ற மெழுகுவர்த்தி தேவையில்லை” என்று கவிதை பாடிக்கொண்டே உயிரை விட்டார்கள் !


இமாம் ஜா·பர் சாதிக் (ரலி), முஹ்யித்தீன் அப்துல் காதிரி ஜெய்லானி (ரலி), ராபியதுல் பஸரியா போன்ற அனேக இறை நேசர்கள் கஸீதாக்களில் தங்கள் கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றார்கள். அதாவது கவிஞர்கள் அல்லாதவர்கள் !

முடிவுரை

இஸ்லாமிய வரலாறு கவிதைகளால் நிரம்பியுள்ளது. கவிஞர்கள் புகழும் செல்வாக்கும் செல்வமும் கொண்டவர்களாக அரசர்களைப் போல வாழ்ந்திருக்கிறார்கள்.

மக்காவில் வாழ்ந்த உமர் இப்னு அபீ ராபியா என்ற காதல் கவிதைகள் எழுதுவதில் புகழ்பெற்ற கவிஞருக்கு 70 அடிமைகள் இருந்தனராம் ! சேர்ந்தே இருப்பது புலமையும் வறுமையும் என்ற கூற்று இஸ்லாமிய வரலாற்றைப் பொறுத்தவரை பொய்யாகிப் போனது !

அரேபிய இஸ்லாமிய வரலாற்றில் அநேகம் பேர் கவிதைகள் பாட முடிந்தவர்களாகவோ, அதாவது மகாகவிகளாகவோ, அல்லது குறைந்த பட்சம் கவிதைகளை கேட்பதில், உற்சாகப் படுத்துவதில் நாட்டம் கொண்டவர்களாகவோ இருந்துள்ளனர்.

கொடுங்கோலன் என்ற பெயரை வாங்கிக்கொண்டுவிட்ட யஸீது கூட கவிதைகள் இயற்றுவதில் சிறந்து விளங்கினார் ! பல லட்சம் பேரை கொன்று குவித்த ஹிட்லர் ஒரு வெஜிடேரியன் என்பதுபோல ! ஆனாலும் உண்மை !

பெருமானரின் காலத்தை கவிதைகளுக்கும் பொற்காலம் என்றே வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதிலே எஞ்சிய பொற்துகள்கள் உலகமுடிவு நாள் வரை பல திசைகளில் இருந்தும் பல மொழிகளிலும் நம்பிக்கையின் மற்றும் மனிதாபிமானத்தின் கடைசி பருக்கை இருக்கும் வரை மின்னிக்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதற்கும் பிரபஞ்ச மகா கவியாகிய எல்லாம் வல்ல இறைவன் உதவுவானாக !

2 comments:

  1. இலக்கியங்கள் மக்களைப்பண்படுத்த பெரிய அளவில் முடியும். தனி மனித சுதந்திரம் என்ற அளவில் இசை இலக்கியங்கள் மனிதனின் மனதிற்கு தேவை.இசையில்லா சமூகத்தில் வன்முறைகள் அதிகம் இருக்கும். அரேபிய நாட்டு மத கலாச்சார பழக்க வழக்கங்களைக் கைக் கொள்ளும் நாடுகளில் இசையை பிரபலபடுத்தினால் வன்முறை குறையும். துள்ளாத மனமும் துள்ளும் சொலலாத கதைகள் சொல்லும்,இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத்தேனையும்ஊட்டும்
    துன்பக்கடலைதாண்டும் போது தோணியாவது கீதம்
    முழு பாடலையும் வெளியிடுங்கள்.பொருத்தமாக இருக்கும். முஸ்லீம்கள் கர்நாடக ச்ங்கீதம் முறையாகப் படிக்க வேண்டும். முக்கியத்துவனம் கொடுக்க வேண்டும்.இந்து மதத்தில் -இந்திய நாகரீகத்தில் - இசை மூலம் இறைவனை அடையலாம் என்றே சொல்வார்கள். தரமான கட்டுரை நன்றி

    ReplyDelete
  2. மிக அருமையான ஆதாரபூர்வமான கருத்துக்கள்.
    கவிஞர்களை கொச்சைப் படுத்தும் கிறுக்கு மேதைகள் திருந்தட்டும்.

    ReplyDelete